My Blog List

Thursday, 23 June 2016

விதைத்து வைப்போம்


விளைந்ததெல்லாம் விதையாவதில்லை

விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை
முளைப்பதெல்லாம் எழுவதில்லை

எழுவதெல்லாம் பூப்பதில்லை
பூப்பதெல்லாம் காய்பபதில்லை

காய்ப்பதெல்லாம் கனிவதில்லை
கனிவதெல்லாம் இனிப்பதில்லை

இனிப்பது எல்லாமே இனியது இல்லை

இனியதுவே வேண்டுமென்றா விதைக்கிறோம்?

இருந்தாலும் விதைக்கிறோம்..!

விதைப்போம்..!!
வார்த்தைகளையும் ...!

இருந்தால்....

உரம் ..!

எழுந்தால்...?


விருட்சம்....!!!

Thursday, 21 April 2016

தமிழனே...! ரோசம் கொள்ளடா..!!

டேய்..அடேய்ய்..அடேய்களா..!!!

300ரூபாய பார்த்ததே இல்லையா

கோழி பிரியாணிய திண்ணதே இல்லையா

மறுநாளே அது நரகலாகப் போவது தெரியாதா

குனிந்து வணங்கி கூன் விழுந்தது போதாதா

அடிமை படுத்துவதே தெரியாமல் மயங்கி கிடப்பது எதனால் ?

சுட்டெரிக்கும் வெய்யிலில் கருவாடாக
காய்வது எதற்காக

ஓட்டுக்கு 1000ரூ வாங்கிய நீ இன்னும் அன்னக்காவடி

அதை கொடுத்தவன் இப்போது அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் ..!!

தரையில் கால் படாத...

தூசி படாத ..

வெய்யிலில் நிற்காத..

கொள்ளை அடிப்பத நிறுத்தாத..

அடிமைகளை வளர்க்கிற..

வாரிசுகளை மட்டுமே நினைக்கிற..

லஞ்ச ஊழல்களில் கொழுத்து கிடக்கின்ற

ஜாதி மத சண்டைகளை தூண்டி விடுகின்ற..

ஓட்டுப்பொறுக்கி நபர்களை ஏன் இன்னும் நம்புகிறாய் .

தமிழனே.. ரோசம் என்பதே வராதா உனக்கு?

Wednesday, 20 April 2016

யாருக்கு போடுவது ஓட்டு?

ஓட்டு போடு ஓட்டு போடு என்று நச்சரிக்கிறீர்களே..

யாருக்கு ஓட்டுப்போடுவது?

ஜெயிப்பவர்.,

வேறு கட்சிக்கு தாவ மாட்டாரா?

தொகுதிப்பக்கம் திரும்பி வருவாரா?

தொகுதி வளர்ச்சிக்கு உழைப்பாரா?

லஞ்சம் வாங்கமாட்டாரா?

ஊழல் செய்யமாட்டாரா?

ஜாதி சண்டையில் குளிர் காயமாட்டாரா?

தனக்கு பின் தன் வாரிசுகளே தேர்தலில் நிற்க வேண்டும் என விரும்ப மாட்டாரா?

இப்படி ஒருவர் தெரிந்தால் அவருக்கே என் ஓட்டு.

அதுவரை இந்த ஐனநாயகம் ஒரு பணநாயகம்.,கேலிகூத்து.

உஸ்ஸ்...ஸப்பா!!!!

Monday, 14 March 2016

மீண்டும் ஒரு ஜாதி துவேச ஆணவ கொலை..

மீண்டும் ஒரு ஜாதி துவேச ஆணவ கொலை..உடுமலைப்பேட்டையில்..

கெளரவகொலைகளும்,கூலிப்படைகளின் பயமற்ற போக்கும் நமது சட்டம் ஒழுங்கு மையத்தையும் நீதித்துறையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கேலிக்குறியதாக மாற்றி இருக்கிறன.

அரசியலாகட்டும் சினிமாவாகட்டும் எல்லாவற்றிலும் ஜாதி துவேசத்தை வளர்த்து விட்ட பாவிகளின் செயலை யார் தடுப்பது?

விருமாண்டி,தேவர்மகன்,பாரதிராஜாவின் பலபடங்கள்,மதயானைக்கூட்டம்,பருத்திவீரன் மேலும் பல தமிழ் திரைபடங்கள் என்ன போதித்ததோ அதன் பலன் இதுவே.

ஜாதிதுவேசத்தை குறைப்பதற்கு பதில் நம் திரைபடங்கள் அதை கொம்பு சீவி விட்டு அதன் மூலம் லாபம் சம்பாதிக்கவே முனைகின்றன.

சமுதாயம் சீரழிவை மடிமீது ஏந்தி நிற்கிறது என்பதற்கு இன்னும் ஒரு சாட்சி.

நெஞ்சம் கனக்கிறது..மனம் வெம்புகிறது..

பயந்து வருகிறது வருங்காலம் நினைத்து..

வெட்கமாக இருக்கிறது.

Friday, 11 March 2016

நான் பழக பயந்த வேலை..



கமலை.
வாரி..
சால்..
பெரு உருளை
சிறு உருளை
வடக் கயிறு
வால் கயிறு...
இவை எல்லாம் என்ன?
நீங்கள் பார்க்கும் இந்த படத்தில் உள்ள பாகங்கள்.

கிணற்றில் உள்ள தாண்ணீரை சாலில் மொண்டு வடக்கயிற்றின் மேல் ஒரு சைடா உட்கார்ந்து கொண்டு வாரியின் கடைசி வரை மாட்டை ஓட்ட வேண்டும்.சால் மேலே வந்தவுடன் கயிற்றில் இருந்து இறங்கி வால் கயிற்றை இழுத்தால் தண்ணீர் வாய்க்காலில் கொட்டிவிடும்.ஆரம்பத்தில் மாட்டின் வாலை பிடித்து பேலன்ஸ் செய்தபடி போகவேண்டும்.தவறினால் பெரும் ஆபத்தாகி விடும்.

விவசாய வேலைகளில் இதற்கு மட்டும் என்னை அனுமதிக்கவே இல்லை என் தந்தை.நானும் பயந்து கடைசி வரை பழகவே இல்லை.

Thursday, 3 March 2016

முக்கலும் முனகலும் யாருக்கு கேட்க போகிறது?

விவசாயத்தில்...
அடியில் உள்ளவை காட்டுக்கு
நடுவில் இருப்பவை மாட்டுக்கு
நுனியில் உள்ளவை வீட்டுக்கு

இது தான் நமது விவசாய தத்துவம்.

விளைந்த நிலத்தில் கிடைத்தவற்றை உண்டு கொழுத்து திரிந்த ஆடுகளும் கோழிகளும் நிறைந்திருந்த இடம்.

நெல்,கம்பு,ராகி,சோளம்,கடலை என்று விளைந்த பொழுது ரீங்காரமிட்ட குருவிகளோ ஏராளம்.

கால்நடைகளினால் கிடைத்த இயற்கை உரம் போய் நிலத்தை கெடுத்த வெடி உப்புக்கள் உரங்களாய் வந்து நாசம் செய்தன.வானமும்  பொய்த்தது;பருவ நிலையோ ஏமாற்றியது.

லட்சம் கோடிகளில் துவங்கப்படும் மொபைல் போன் கம்பெனிகளும் ஏனைய மற்ற கம்பெனிகளும் அரசிடமிருந்து கோடிக்கணக்கில் வரிசலுகையும் தடையற்ற மின்சாரமும் தாராளமாக பெறுகின்றன.

ஆனால் விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்களுக்கு ஏகப்பட்ட வரிச்சுமைகள்,அதுமட்டுமில்லாது கடுமையான மின்வெட்டையும் அரசு தாராளமாக அளித்து விவசாயியின் ப்யூசை பிடுங்கிபோட்டது.

வெங்காயமும் தக்காளியும் விலையேறிவிட்டால் குய்யோ முறையோ என கூப்பாடு போடும் மீடியாக்கள் விலை கிடைக்காமல் விவசாயி வீதிக்கு வரும்போது அதை கண்டுகொள்ள மறுக்கின்றன.


கிட்டதட்ட 50 கால திராவிடஆட்சியில் ஒரு குளம் குட்டை எதுக்குமே முயற்சிக்காத அரசியல்வாதிகள் அணை கட்ட யோசிப்பார்களா?

நமது அரசியல்வாதிகளின் கவலையெல்லாம் தேர்தல்,கூட்டணி, காசு, பணம், துட்டு,பேரம் ஆகியவை மட்டுமே.

நெல் சோளம் கடலை என்று செழிப்போடு விவசாயம் செய்த பூமிதான் இங்கே பார்ப்பது.

கிட்டதட்ட 500 தென்னை மரங்கள் இருந்த பூமி என்றால் நம்ப முடிகிறதா?
இன்று மானாவரி விவசாயம் செய்வதே பெரும்பாடாய் போய்விட்ட கொடுமை.

விவசாயநிலங்கள் கஞ்சி தொட்டிகளாகவும் கருங்கல் கட்டிடங்களாகவும் மாறிவரும் வேளையில் அரைகுறை விவசாயத்திற்கே அன்னாந்து பார்த்துக்கொண்டிருக்கும் நலிந்த நசிந்து போன விவசாயியின் முக்கலும் முனகலும் யாருக்கு கேட்க போகிறது?

Tuesday, 19 January 2016

உயர்கல்வி நிலையங்களா?..ஹூஹூம் ..சாதி வெறி பிடித்த கூடங்கள்.

உயர்கல்வி நிலையங்களா..ஹூஹூம் ..சாதீய கூடங்கள்.

இன்று நேற்றல்ல காலம் காலமாக இந்த சாதீய கொடுமைகள் கல்வி நிலையங்களில் வேறூன்றி கிடக்கிறது.

70 களில் நான் படித்த மருத்துவ கல்லூரியில் சாதி வேறுபாடு தலைவிரித்து ஆடியது.

தனிமெஸ், தனி தட்டு என்ற ரீதியில் இருந்த காலம் அது.
கல்லூரியிலோ ஆசிரியர்களால் வீசப்படும் ஏளனப் பார்வைகளையும் தாண்டிதான் படிக்க வேண்டிய சூழ்நிலை.

அப்படியும் அன்று கற்று தேறிய மருத்துவர்கள் இன்று அவரவர் துறையில் சிறந்த டாக்டர்களாக திகழ்கிறார்கள்.

பொறுத்த பார்த்த அடக்கப்பட்ட மாணவர்கள் அணி திரண்டு சீறிப்பாய்ந்ததும் உண்டு.
நானே இருமுறை சாதி கலவரத்தில் பங்கு கொண்ட நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளது.அது ஒரு துரதிருஷ்டம் .

ஒதுக்கப்பட்டவர்கள் ஒடுக்கபட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று பல வித ரூபங்களில் மனஉளைச்சலை மேல்தட்டு வர்க்கம் தொடர்ந்து கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது.

இன்றும் எல்லா அரசினர் தலித் மாணவர் விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளை பார்த்தால் அவர்கள் எவ்வளவு கீழ் தரமாக நடத்த படுகிறார்கள் என்பதை கண்கூடாக காணலாம்.
ஐஐடி,எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிலையங்கள், கிரிக்கெட் போன்ற விளையாட்டு துறை இவை எல்லாவற்றிலும் ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் படும் துன்பங்கள் ஏராளமானவை.

திரைபடங்களிலோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாதி துவேசம் என்ற அமிலத்தை அவ்வப்போது பிரபலங்கள் முதல்கொண்டு உமிழ்ந்து விட்டுதான் செல்கிறார்கள் ..அன்மையில் வந்த  பிச்சைக்காரன் பட பாடலையும் சேர்த்து..

மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதென்பது பெரும்பாபம்..
கொடுமையிலும் கொடுமை..
இதை தடுப்பதற்கு சட்டம் இருந்தும் அதை அமல்படுத்த தயங்கும் அரசு..

பலன் ?

சமீபத்திய நான்கு தொழிலாளர்களின் மரணங்கள் ..

கல்வியிலும் பொருளாதாரத்திலும் தலித் மக்கள் தன்னிறைவு அடைய பல இடர்பாடுகளை தாண்டியே ஆகவேண்டும்.

மேல்தட்டு மக்களின் சகிப்புத்தன்மை வளர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்...

அந்த நிலையை அவர்கள் தானாக அடையவேண்டும் அல்லது அடையவைக்க வேண்டும் ..

முன்னது நிரந்தரமானது , பின்னது தற்காலிகமானது.

அது வரை ரோகித்களும்,செந்தில் குமார்களும் உருவாகி அவ்வப்போது நம் காட்டுமிராண்டித்தனத்தை ஞாபகபடுத்திக்கொண்டே இருப்பார்கள்.